Thoothukudi firing: தூத்துக்குடியில் 2018 மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
ஆணையத்தின் 34ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 34ஆவது அமர்வு இன்றுடன் நிறைவுபெற்றது.
இது தொடர்பாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளரிடம் கூறுகையில், "ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 34 கட்ட விசாரணையில் ஆயிரத்து 417 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, ஆயிரத்து 37 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்ட ஒன்பது உயர் அலுவலர்களில் ஆறு பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். ஒருநபர் ஆணையத்தின் 35ஆவது அமர்வு விசாரணை வருகிற ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை நடைபெறும். இதில், அழைப்பாணை அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள்.
மேலும், துப்பாக்கிச் சூட்டின்போது பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், தென்மண்டல ஐஜி, டிஐஜி உள்பட முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தவர்கள், தேவையென்றால் மட்டும் மீண்டும் அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இனிவரும் சாட்சியங்கள் அனைத்தும் முக்கியமானவை என்பதால் விசாரணை நீண்ட நேரம் நடக்கும்.
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரிடம் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் சாட்சியங்களில் ஒருவரைத் தீர விசாரிப்பதற்கு ஒருநாள் கூட தேவைப்படலாம்" என்றார்.
இதையும் படிங்க: Female infanticide: உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை?