தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதி முத்துராஜ்-உமாமகேஷ்வரி. முத்துராஜ் சமையலராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களது நான்கு வயது மகன் பிரவீன்குமார், மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தார்.
கடந்த 4ஆம் தேதி பிரவீன்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பிரவீன்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில மருந்து மாத்திரைகளை அளித்துள்ளனர். இருப்பினும், காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது.
இதனால், கடந்த 11ஆம் தேதி, கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, பிரவீன்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஏ.டி. போஸ்கோ ராஜா கூறுகையில், "மந்தித்தோப்பு கிராமத்தில் சிறுவன் பிரவீன்குமார் இறந்தது தொடர்பாக விசாரித்துவருகிறோம். பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களது வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரமற்று இருந்தால் உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குளத்தில் மூழ்கிய நண்பன்... விளையாடுவதாக நினைத்து காப்பாற்றாமல்விட்ட தோழர்கள்!