தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பிற்காக ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இரண்டு கம்பெனி எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 120 வீரர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்புத் தேவையின் காரணமாக தற்போது கூடுதலாக ஏழு கம்பெனி எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 784 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்த விளக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்டத் தேர்தல் அலுவலர், "மாவட்டத்தில் சுழற்சிமுறையில் மூன்று குழுக்களாகப் பணியாற்ற உள்ளனர். விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் தலா ஒன்பது குழுக்களும், கோவில்பட்டி தொகுதியில் 15 குழுக்களும் பணியாற்ற உள்ளனர்.
மாவட்டத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும்வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும்படை கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் செயல்படுவர்.
மாவட்டத்தில் உள்ள 298 பதற்றமான வாக்குச்சாவடிகள், 23 இடங்களில் உள்ள மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவர்" என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கும் நிலையில், வாகன சோதனை தீவிரம்