தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தடுக்க கடலோர காவல்படை மற்றும் போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவை பட்டியலில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் உப்பளப் பாதையில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பக்கமாக வந்த லோடு வேன், போலீசார் நிற்பதைக் கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுத் தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டை பீடி இலை மற்றும் சுமார் 57 ஆயிரம் வல நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், பொருட்களைக் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் லோடு வேன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை மீது வழக்குப் பதிவு செய்து கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமிறும் காளைகள், அடக்கிய வீரர்கள்; மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரரின் கோரிக்கை என்ன?