தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் பாலமுருகன் (40). இவர் கோவில்பட்டி நகராட்சி 5-ஆவது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்தவர்.
இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மாவட்ட கிழக்கு காவல் துறையினர் ஆகியோர் பாலமுருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொலைவிலுள்ள இலுப்பையூரணி விலக்குவரை மோப்பநாய் ஓடியது. எனினும் யாரையும் பிடிக்கவில்லை.
பாலமுருகன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக வேலை பார்த்தவர். ஆகவே இவரது கொலைக்கு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளதா என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யக் கோரி அதிமுகவினர், பாலமுருகன் உறவினர்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும், பாலமுருகன் உடல் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பெண் சடலம் மீட்பு: மூட நம்பிக்கைக்காக நிகழ்ந்த உயிர் பலியா?