தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை (27ஆம் தேதி), வரும் 30ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த இரண்டு தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மாலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசியத் தகவலையடுத்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் உத்தரவின்பேரில், கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் குமாரவேல் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு காவலர்கள் மாலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வாகனச் சோதனையின்போது கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அடுத்துள்ள புதூர் பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திசெல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, காரிலிருந்த புதூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண், எட்டயபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிக்கண்ணன், பாலகிருஷ்ணன், முத்துகுமார், கழுகுமலையைச் சேர்ந்த பூமிநாதன், சண்முகையா ஆகிய ஏழு பேரை கைது செய்த மது விலக்கு காவல் துறையினர், அவர்களிடமிருந்து மொத்தம் 313 மதுபாட்டில்கள், கார், பைக், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : இந்த தசாப்தத்தின் மிகப் பிரலமான டீனேஜர் யார் தெரியுமா ?