திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கிறேன். இதுவரை தகவல் உறுதிசெய்யப்படவில்லை; உறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா தொற்றால் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு முழுமையாகச் செயலாற்றிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மின்வெட்டை பார்க்கும் பொழுது மின்வெட்டே இல்லாத காலம் இதுதான். தொடர்ந்து மின்வெட்டு இருந்திருந்த மாநிலத்தில் தற்போது மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கியிருக்கிறார் முதலமைச்சர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுக்கு வேதம்" எனத் தெரிவித்தார்.