திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். நெற்பயிர்கள் முழுவதும் அறுவடைக்கு தயாரான நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த கனமழையால் நெல் மணிகள் முழுவதும் நீரில் மூழ்கின.
குறிப்பாக, பேரளம், திருமிச்சியூர், இஞ்சிகுடி, கோவிந்தச்சேரி, பண்டாரவாடை உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால், அந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், இது போதுமானதாக இல்லை என்பதால் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கினால் மட்டுமே இதுவரை செலவு செய்த செலவுகளை ஈடுகட்ட முடியும் என கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஏக்கர் ஒன்றுக்கு சாதாரணமாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய அறுவடை இயந்திரம், தற்போது விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 5 மணிநேரம் ஓடுகிறது. எனவே, அறுவடை இயந்திரத்தை ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக குறைத்தால் உதவியாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.