திருவாரூர் நகரில் துர்காலயா ரோடு, வஉசி தெரு ,கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர், நீடாமங்கலம், திருக்குவளை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி பேதி ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களில் 6 பேருக்கு காலாரா இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி விநியோகித்த குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிப்புக்குள்ளான அனைவரும் இந்த மாசடைந்த குடிநீரை பருகியதாலேயே வாந்தி பேதி பாதிப்பு என கூறப்படுகிறது.

உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீரை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து சீர்செய்ய நகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவிட்டார். உடனடியாக களத்தில் இறங்கிய நகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய்களின் அடைப்பையும் பாதாள சாக்கடை இணைப்பையும் செப்பனிட்டு சீர் செய்தனர்.