திருவாரூர்: 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் நான்கு நாட்கள் பயணமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் இன்று (ஜன.21) திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஆலங்குடி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "எடப்பாடி பழனிச்சாமி தான் இறைவன் அருளால் முதலமைச்சரானேன் என தற்போது சொல்லி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி இருந்தால் நாங்கள் நம்பியிருப்போம். சசிகலாவின் காலில் விழுந்து, சசிகலாவின் அருளால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி. வரம் கொடுத்தவர் தலையில் கை வைப்பது போல, சசிகலாவிற்கு துரோகம் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படவில்லை.
கரோனா விவகாரத்தில் அதிமுக அரசு கவலைப்படவில்லை. அவர்கள் எண்ணம் எல்லாம் வைத்தால் குடுமி அடித்தால் மணி என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள்.
உங்களுக்காக 2500 ரூபாய் கொடுக்கவில்லை. ஓட்டுக்காக கொடுத்துள்ளார்கள். பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம். நமது பணத்தை பெற்றுக் கொண்டு, பணம் கொடுக்கிறார்கள்.
ரூ. 2500 கொடுத்துவிட்டு, டாஸ்மாக் கடை மூலம் பெற்றுக்கொள்ளாம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.
உலகத்திலேயே தலைசிறந்த மருத்துவர்கள் தமிழர்கள் தான். உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, சாமானிய மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.
வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் வியாபாரம் செய்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசால் ஏமாந்து விட்டோம். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான தேர்தல் என கூறினார்.
இதையும் படிங்க: அரசியல் லாபத்துக்காக எம்.ஜி.ஆரின் பெயரை எடுக்கவில்லை: கனிமொழி எம்.பி!