திருவாரூரில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழாவுடன் திருவள்ளுவரின் 2050ஆவது ஆண்டுக்கான நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "தமிழர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகிறது. ஆங்கிலேய அரசைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி அரசு செயல்படுகிறது. மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து நிற்கிறது.
ராணுவ கட்டுக்கோப்புடன் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நீட் தேர்வுகளில்கூட ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டு அரசு என்ன பொறுப்பேற்கப் போகிறது. இப்படிப்பட்ட முறைகேடான ஒரு தேர்வு முறையை வைத்துக் கொண்டு சிறந்த மருத்துவர்களை உருவாக்குவோம் என்பதை எப்படி நம்புவது?
தமிழ்நாடு அரசில் ஆடிட்டர் குருமூர்த்தி எந்தளவுக்கு முக்கியமானவர் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக போராட்டங்கள் நடத்தியிருக்கிறாரா என்று கூட தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை சீரழிவுகளுக்கும் பின்னால் இருக்கும் நபர்களில் அவரும் ஒருவர்" என்று கடுமையாகச் சாடினார்.
மேலும் படிக்க : ஸ்டாலின் அதிமுகவை குறைகூறுவதையே தொழிலா வச்சுருக்காரு!