திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குருபரிகார தலமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தலம், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற சிறப்புவாய்ந்த தலமாகும்.
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாத்திரங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை அதிகாலை குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும்.
இதில் நேற்று இரவிலிருந்தே எராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். இந்தக் குருபெயர்ச்சிக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் குருபெயர்ச்சியை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனிசந்நிதியில் அமைந்துள்ள தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல் மதுரை மாவட்டம் குருவித்துறைப் பகுதியைச் சேர்ந்த குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாகத் தொடங்கியது. நள்ளிரவு 1 மணியிலிருந்து கோயிலில் சிறப்பு பரிகார மகா யாகம் ரங்கநாத பட்டர், ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க பரிகார யாகம் வளர்த்து புனிதநீர் சுவாமி சன்னதியில் அமைந்துள்ள குருபகவானுக்கு ஊற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு குருபகவான் காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டுச்சென்றனர்.
இதையும் படிங்க: ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த ஆளுநர்; ஒரே இரவில் நடந்த விழா ஏற்பாடு!