திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 21 வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,233 ஆக இருந்தது. ஜூலை 22 புதிதாக நான்கு வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் உட்பட 210 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
அதில் சென்னையிலிருந்து வந்த 3 பேர், பஞ்சாப், பெங்களூரில் இருந்து வந்த தலா ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 82 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 37 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 70 பேர், முன் களப்பணியாளர்கள் 7 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 9 பேர் உள்ளிட்ட 210 பேர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,443 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,864 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாவல்பாக்கம், வந்தவாசி, காட்டாம்பூண்டி, தண்டராம்பட்டு, பொன்னூர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆக்கூர், ஆரணி, போளூர், பெருங்காட்டூர், எஸ்வி நகரம், சேத்பட் உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 210 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 100க்கு மேல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் புதிய பரிசோதனை முறை!