திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கிராமத்தில் கிராம ஊராட்சியின் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கரோனா வைரஸ் போன்று ஒருவர், தலையில் கிரீடம் அணிந்து உடல் முழுவதும் கரோனா மாதிரி படம் வரைந்து, கவச உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கரோனா வைரஸ் எந்த நாட்டில் உருவானது, எவ்வாறு பொது மக்களிடையே பரவியது, அந்த நோயிலிருந்து நாம் எவ்வாறெல்லாம் தற்காத்துக்கொள்ள முடியும் என்பது பற்றி, கரோனா வேடமணிந்தவர் கிராம மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.
அனைவரும் ஒரு நாளைக்கு 20 முறை கைகளைக் கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், மத்திய - மாநில அரசுகள் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று கூறி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்டோர் தாயக்கட்டை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே சென்ற கரோனா வேடமணிந்த வரைக் கண்டு, அங்கிருந்தவர்கள் கரோனா நம்மை துரத்துவதாக எண்ணி அஞ்சி ஓட்டம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கிராமம் முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் மூலம் கிராமத்தின் தெருக்கள் தோறும் இருபுறங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!