திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரிலுள்ள பழம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகன் பாலு (25). இவரும் சேத்துப்பட்டு வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகள் கார்த்திகா (23) என்பவரும் கடந்த இரண்டரை வருட காலமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் சென்னை ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றி வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மலர்ந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோரிடமிருந்து காதலுக்கு எதிர்ப்பு வலுத்தது.
இதனால் கார்த்திகாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனை அடுத்து கார்த்திகாவும் பாலுவும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஓம் சக்தி ஆலயத்தில், முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள், தாய்மாமன் ஆகியோர் தேசூர் காவல் நிலையத்தில், பாலு கார்த்திகாவை கடத்தி விட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும் தேசூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்லும்போது ஊரில் செல்வாக்கு உடைய தாய் மாமன் ஆறுமுகம், இருவரையும் பிரித்து விடுவார் என்ற அச்சம் கார்த்திகாவுக்கு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தாய் மாமன் கொலை மிரட்டல் விடுத்து வருவதால் எங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது எனக்கூறி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் கார்த்திகா கூறியபோது, “நான் மேஜர் என்பதால் எனது விருப்பப்படி எனக்கு பிடித்தமானவரை கணவராக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டேன். எனது தாய்மாமன் புகார் அளித்துள்ளபடி என்னை யாரும் கடத்தவில்லை. எனது திருமணம் எனது சுய விருப்பத்துடன் சுயநினைவுடன் நடைபெற்றது” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூறியுள்ளார்.