- திருவண்ணாமலை:
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு இந்து முன்னணியின் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் தோப்புக்கரணம் போடும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதாயிரம் கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களின் முன்பும் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தர்கள் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினால் நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து குடிமக்களை குடிகாரர்களாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது, இதை உடனடியாக தடுத்து நிறுத்தி எங்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு கோயில்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு உத்தரவிடவேண்டும் என்று இந்து முன்னணியின் வேலூர் கோட்டை தலைவர் தெரிவித்தார்.
எனவே விரைவில் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 40,000 கோயில்களையும் திறந்து வழிபாடு நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
- கரூர்:
கரூரில் இன்று கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் முன்பாக ஆலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதாக அதனை கண்டித்து கோஷங்களை எழுப்பி தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் புகழிமலை முருகன் கோவில் மாயனூர் ஓம் சக்தி கோயில் என 14 கோவில்களில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
- கோவை:
கோவை மாவட்டம் டவுன் ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி அமைபினர் தோப்புகரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் முருகன் வேடமணிந்த சிறுவனை முன்வைத்து அவன் முன் தோப்புகரணம் போட்டனர். தோப்புகரண போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் தனி மனித இடைவெளியை பின்பற்றி வழிபாடு செய்திட ஏற்பாடுகள் செய்து கோவில்களை திறக்க வேண்டும் என்று கூறினர்.
- ஈரோடு:
ஈரோடு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பில் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் முன்பாக அந்தந்தப் பகுதி இந்துமுன்னணியினரின் தோப்புக்கரணப் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் முன்பாக தோப்புக்கரண பிரார்த்தனைப் போராட்டத்தில் அமைப்பினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, கோவில்களை திறந்து வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும் என்பன போன்ற முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடைபெற்றது.
- விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிவன் கோவில் முன்பு சிலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரயில் மற்றும் அரசு மதுபானக்கடைகள் வரை திறந்த அரசுக்கு மக்கள் வழிபாட்டிற்கு மறுத்து வழிபாட்டு தலங்களை திறக்காததை கண்டித்து எழுப்பி தோப்புக்கரணம் போட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!