திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கால்நடைகள் வளர்த்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செங்கம் பகுதியை சுற்றி ஏராளமான தரைகாடுகள் உள்ளன. இந்த காடுகளில், கால்நடைகளை மேய்ப்பதற்கு வன அலுவலர்கள் தடை விதித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டித்து ஆடுகள், மாடுகள் மேய்ப்பதற்கு தடைசெய்யாதே எனவும், 2006 வன உரிமை சட்டப்படி வன மகசூலை எடுப்பதற்கும், ஆடு-மாடுகள் மேய்ப்பதற்கு உள்ள உரிமையைத் தடை செய்யாதே உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைமாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மாநில தலைவர் டில்லி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.