சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (60), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (48). இருவரும் உறவினர்கள் ஆவர். இருவருக்கும் இடையே நிலப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி 6, 2015ல் பிரச்னைக்குரிய இடத்தில் பயிர் செய்வது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனியப்பன், மனைவி சங்கீதா ஆகியோர் தாக்கியதில் விவசாயி கோபால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முனியப்பன், சங்கீதா ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த கொலை வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி திருமகள், விவசாயி கோபாலை அடித்துக் கொலை செய்த முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். முனியப்பன் மனைவி சங்கீதா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஷாருக்கானுக்கு மெழுகு சிலை செய்த கோட்டயம் கலைஞர்