திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் அன்பு வேலன்(45). இவர் அப்பகுதியில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் மாத ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அன்பு வேல் சீட்டு சரிவர நடத்தாமல் பணத்தை கட்டியவர்களுக்கு சீட்டு முடிவடைந்த பின்னரும் திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் பணம் கட்டியவர்கள் பலமுறை முறையிட்டும் பணம் அளிக்காமல் ஏமாற்றி வந்ததால் ஆத்திரமடைந்தவர்கள் நேற்று முன்தினம் ஆரணி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஏலச்சீட்டு நடத்தி சுமார் 3 கோடிக்கு மேல் மோசடி செய்த அன்பு வேலை கைது செய்து தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில் சீட்டு மோசடி தொகை அதிகம் என்பதால் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சீட்டு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்