திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படவேடு பகுதியில் அமைந்துள்ள 154 ஆண்டுகள் பழமையான தற்போதும் பயன்பாட்டில் உள்ள அலியாபாத் அணைக்கட்டினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1866ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு அங்குள்ள ஏரிகளை இணைப்பதில் பிரதானமாக உள்ளது. இந்தக் கால்வாய் வழியாக களம்பூர் ஏரி உள்பட 16 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைகிறது. இதன் கிளை கால்வாய் வழியாக கமண்டல நதிக்கு தண்ணீர் சென்றடைகிறது. இதன் மூலம் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி 7,497 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
அலியாபாத் அணைக்கட்டினை சீரமைப்பதற்கும், கால்வாய், ஏரிகளை புனரமைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் பிரதான கால்வாய்க்கு தற்காப்பு சுவர் இரண்டு பக்கமும் கட்டுதல், கீழே கான்கிரீட் தளம் அமைத்தல், கால்வாயில் 10 கிலோமீட்டர் தூர்வாருதல், 16 ஏரிகளின் மதகுகள், கரை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்போவதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பாசன விவசாய நவீன மயமாக்கல் திட்டம் மூலம் உலக வங்கி நிதி உதவியுடன் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதலமைச்சர் அடிக்கல்