திருவள்ளூர் மாவட்டம் கீழ் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் பானுமதிக்கும்(17), அவரது உறவினரான யுவராஜ் என்பவருக்கு, வெள்ளிக்கிழமை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் திருமணம் குறித்து சமூகநலத்துறை அலுவலருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, சமூகநலத்துறை அலுவலர்கள் மீனா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில், காவல்துறை உதவியுடன் வெள்ளாத்துகோட்டை பகுதியில், உள்ள வீட்டில் வைத்து அலுவலர்கள் சிறுமி பானுமதியை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில், ஒண்டிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை நடக்கவிருந்த திருமணத்தை மணமகள் வீட்டில் வைத்து அலுவலர்கள், தடுத்து நிறுத்தினார்கள். இதனால், காவலர்கள், அலுவலர்களுடன் பெண்ணின் வீட்டார் கடும் வாக்குவாதம் செய்தனர். பானுமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அலுவலர்கள் சமரசம் மேற்கொண்டு, பெண்ணிற்கு 18 வயது ஆகும் வரை திருமணம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.