திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் சசிகுமார், முன்னாள் தலைவர் ஹரிதாஸ், துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் ஆகியோர் அவரை அரசுப் பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றவிடவில்லை. இதுகுறித்த செய்தி ஈடிவி பாரத்தில் வெளியானது.
இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலின ஊராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எஸ்பியிடம் உத்தரவிட்டதன் பேரில் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார்.
பின்னர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியதாவது, "ஊடகத்தின் முக்கியத்துவத்தை இந்த இடத்தில் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் எந்த ஊரில் நடந்தாலும் தொடர்ந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவர் மரணம்!