தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தொகுதிவாரியாக அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏகே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து, திருத்தணியில் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளின் பரப்புரை தொடங்கியது.
முன்னதாக, திருத்தணியில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு, கொண்டமாபுரம் பகுதியிலிருந்து வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பரப்புரையை தொடங்கினார். இதில், கூட்டணி கட்சியான தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து அவர் வேட்பாளரிடம் நேரடியாகவே கேட்டார்.
இதனால் அப்பகுதியில் தேமுதிக கட்சியினருக்கும், அதிமுக கூட்டணி கட்சியினருக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 'உங்களுக்காக நாங்கள் தனிப்பட்ட முறையில் பரப்புரை செய்துவருகிறோம். ஆகையால், நீங்கள் அதிமுகவினர் உடனே பரப்புரைச் செய்துகொள்ளுங்கள்' என்று கோபமாக கூறி வேனில் ஏற மறுத்தார்.
இதையடுத்து, ஏகே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவரை தனது பரப்புரை வேனில் ஏற்றிக்கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பணியை தொடங்கினார்.