திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம், சிறுவாபுரி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். சோழவரம் அடுத்த எருமைவெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீவரமுக்தீஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்ட அவர் சிதிலமடைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் கோயில் குளம், கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் குன்றின் மீது அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயத்தையும் பார்வையிட்டார்.
பின்னர் பொன்னேரி சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான நூறு ஏக்கர் இடங்கள், 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் 70 நாள்களில் மீட்கப்பட்டுள்ளன.
கோயில்களுக்கு வரவேண்டிய நிதியை யார் மடைமாற்றம் செய்திருந்தாலும் வெளிப்படைத்தன்மையோடு கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். 12 ஆண்டுகள் குடமுழுக்கு செய்யப்படாத இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆலயங்களில் உடனடியாக கும்பாபிஷேகம் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் அர்ச்சகர்கள் குறைவாக உள்ளதால் அனைத்து ஆலயங்களிலும் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் மற்றும் திருத்தணி முருகன் ஆலயங்களுக்கு ஆடி மாதத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” என்றார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராசன்,பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.