திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகர திமுக துணைச்செயலாளர், திருவள்ளூர் நகராட்சி 16ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பரசுராமனின் மகன் கலைவாணன். இவரும் திமுக மாணவர் இளைஞர் அமைப்புச் செயலாளராகவுள்ளார். இவர் அரசு மருத்துவமனை அருகே ஆங்கில மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் நகரில், ஜே.என். சாலையில் அமைந்துள்ள அவருடைய மருந்துக் கடையைத் திறக்க கலைவாணன் வரும்பொழுது, நான்கு பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக அவரை கத்தியால் வெட்டியுள்ளனர். வெட்டுக் காயங்களுடன் அலறும் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
கடந்த வாரம் நண்பர்களுக்கிடையே நடந்த சண்டையின் விளைவால், இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ஆபத்தான நிலையில் கவுன்சிலரின் மகன் கலைவாணன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வெட்டப்பட்டவர்கள் யார் என்று இதுவரை தெரியாத காரணத்தால் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.