திருவள்ளூர் - ஆவடி சாலையில் அமைந்துள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இச்சாலையோரம் தொழிற்சாலை கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் வீடுகள், தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகின்றன. இதன்காரணமாக, ஆவடி சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, அந்தச் சாலை வழியாகப் பயணிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
காக்களூர் தொழிற்பேட்டை கழிவுகளை தண்ணீர்குளம் ஏரியில் விடுவதற்கு விவசாயிகளும் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கழிவுநீர் செல்லும் கால்வாயில் மண்ணைக் கொட்டி நிரப்பி தொழிற்சாலை கழிவுகள் வரவிடாமல் தடுத்துள்ளனர்.
காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகளால் தண்ணீர்குளம் ஏரியில் நீர் மாசடைவதுடன் நிலத்தடி நீரும் கேள்விக்குறியாகயுள்ள நிலையில், தொழிற்பேட்டையில் இருந்துவரும் கழிவுநீர் கால்வாயில் ஓடை மண்ணைக் கொட்டியதால், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவிவருகிறது.
இதனால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை மேலாளர் கவிதா மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், மாவட்ட வருவாய் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது தொழிற்சாலைகள் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆலைக் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காததால், தொழிற்சாலைகள் பணி முடங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு: ஒருவர் கொலை!