நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகளோடு இணைந்து நாடெங்கும் 41 பாதுகாப்பு தொழிற்சாலையில் 82 ஆயிரம் தொழிலாளர்கள் முப்படைகளுக்கு தேவையான டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், வாகனங்களுக்கு தேவையான எஞ்சின்கள் என 650க்கும் மேற்பட்ட தளவாடங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதில் மிகவும் முக்கியமான 275 ராணுவ தளவாடங்களை இனிமேல் பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி பேசிய ஊழியர்கள், மத்தியில் இரண்டாவது முறை பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு, 100 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டிய திட்டங்களில் 41 பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளையும் கார்ப்பரேஷனாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.