ராமநாதபுரம் மாவட்டம், நெய்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சுபாஷ் (24). வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பாபு (25). இருவரும் சென்னை பாடியாதவாள் தெருவிலுள்ள வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இருவரும் தங்கியிருந்த வீட்டில் 2017ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதியன்று பாபு கழற்றி வைத்திருந்த தங்க செயின் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து ஆரோக்கிய சுபாஷிடம், பாபு கேட்டபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அடுத்த நாள் அதிகாலை இருவரும் தூங்கி கொண்டுடிருந்த வேளையில் பாபு எழுந்து, ஆரோக்கிய சுபாசை எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் செயினை எடுத்திருந்தால் எடுத்த இடத்திலேயே வைத்து விடு என்றும் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆரோக்கிய சுபாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கொரட்டூர் காவல் துறையினர் ஆரோக்கிய சுபாஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.
இதில் ஆரோக்கிய சுபாஷ் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ரவுடியைக் கொன்று காவலர் குடியிருப்பு அருகே வீசிச் சென்ற நபர்கள்!