கரோனா தொற்று பாதிப்பைக் குறைப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறிவோர் மீது வழக்குப் பதிவு செய்தும் அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்தும் காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, பணி நிமித்தமாக வெளியே சென்று வீடு திரும்புகையில், அவரை நிறுத்தி ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 188ஆவது சட்டப்பிரிவின் கீழ் அவரது வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜா, அப்பகுதியில் இருந்த செல்ஃபோன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளார்.
தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என அவர் கூறியதை அடுத்து, ஆரம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது வாகனத்தை மீண்டும் எடுத்து வந்து கொடுத்து சமாதானம் செய்தனர்.
ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இதுவரை ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும், 17 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - மாவட்ட ஆட்சியர் மட்டும் மரியாதை செலுத்த அரசு அறிவுறுத்தல்