மாங்காடு அடுத்த சிக்ராயபுரம், அனுகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(28). பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த போகி பண்டிகை தினத்தன்று கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாங்காடு போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் யுவராஜின் நண்பரான அப்பு என்ற தாமோதரன்(23) என்பவர் கடைசியாக யுவராஜுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக தெரிவித்ததையடுத்து அப்புவை கைது செய்தனர்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது நண்பர்களான ஜெகநாதன், முத்து (எ) முத்துக்குமார் ஆகியோரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பெயிண்டர் வேலைக்கு அனைவரும் ஒன்றாக சென்று வந்த நிலையில் மற்ற இடங்களில் கிடைக்கும் வேலைகளில் ஆட்களை பிடித்து அனுப்பவது மற்றும் அந்தப் பகுதியில் யார் பெரிய ஆள் என்பதில் யுவராஜுக்கும், முத்துக்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது மூன்று பேரும் தனக்கு கீழ்தான் செயல்பட வேண்டும் இல்லையென்றால் அனைவரையும் கொன்று விடுவதாக யுவராஜ் மிரட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து, ஜெகன் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார். கடந்த மாதம் சபரிமலைக்கு சென்று விட்டு குற்றாலத்திலிருந்து வரும்போது யுவராஜை தீர்த்துக்கட்ட அரிவாளை வாங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று மூன்று பேரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த யுவராஜ் மூன்று பேரையும் திட்டியுள்ளார். மேலும் தீர்த்து கட்டி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற மூவரும், யுவராஜுக்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். போதை தலைக்கேறியதும் ஆத்திரத்திலிருந்த ஜெகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து யுவராஜை வெட்டியுள்ளார். மேலும் மற்ற இருவரும் அரிவாளை வாங்கி யுவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்” என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.