திருவள்ளூரில் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இரண்டு பாழடைந்த வீடுகளில் கஞ்சா மற்றும் மதுபானங்கள் விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர்கள் சுதாகர், சுரேஷ் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்து பிரபல கஞ்சா வியாபாரி ஏழுமலை மற்றும் அவரது மூன்று மகன்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால், அவர்களிடமிருந்து கஞ்சா வாங்க வந்த திருவள்ளூர், காக்களூர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ,139 கஞ்சா பொட்டலங்கள், 9 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், 3 லட்சத்து 16 ஆயிரத்து 119 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2 புல்லட் பைக்குகள் உட்பட 5 இருசக்ககர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.