திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் - கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு சுரேந்தர் (24), ஷாலினி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேந்தர் இஞ்சினியரிங் முடிந்துவிட்டு சென்னையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து வீடு வந்த சுரேந்தர், நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து திரும்புகையில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு ரயில் நிலைய தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக ரயில்மோதி சம்பவ இடைத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனிடையே சுரேந்தர் வீடு வராததால் தேடி வந்த அவரது தந்தை கோபால், மகன் ரயில் விபத்தில் உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகன் இறந்த துயரம் தாங்காமல் அங்கேயே ரயில்முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். தந்தை, மகன் இருவரும் இறந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த மனைவி, மகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனைத் தடுத்து ரயில்வே போலீஸார் உறவினர்களிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீஸார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை, மகன் இருவரும் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.