திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை அமைக்க ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட தாலுகாக்களில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
முப்போகம் விளையக் கூடிய நிலங்கள் இவ்வழியே உள்ள நிலையில், வேறு பாதையில் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 26) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கம், மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கூறுகையில், " தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை அமைக்க ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் முப்போகம் விளையக் கூடிய விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும்.
சாலை அமைக்க திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1300 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. விளைநிலங்களில் சாலை அமைக்க கூடாது. வேறு பாதையில் சாலை அமைக்க வேண்டும்.