திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் தொடர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், 15ஆம் தேதி வடபெரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியர் ஒருவரின் வாகனத்தில் மோதுவது போல வந்த இரு இளைஞர்கள் அவரின் சட்டை மேல் பையில் கையை விட்டு அதில் இருந்த செல்போனைத் திருடிச் சென்றனர்.
செல்போனை பறிகொடுத்தவர், உடனடியாக செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தகுமார் திருடர்களைப் பிடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருடுபோன செல்போன் ஐஎம்இ எண்ணைக் கொண்டு ஆய்வு செய்த போது அந்த செல்போனை வைத்திருந்தவர், அதை 2 ஆயிரம் ரூபாய்க்கு செங்குன்றம் எம் ஏ நகர் பகுதியில் வாங்கியதாக தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, சூரிய பிரகாஷ், ராஜசேகர் இருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு இரண்டு நாளில் செல்போன் திருடர்களை பிடித்த காவலர்களை மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: முழு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!