தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை நடத்திவருகின்றனர். இன்று திருவள்ளூரில் இந்த சட்டத்தின் பாதகங்களை விளக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே கையெழுத்துப் பெற்றார்.
அப்போது பேசிய அவர், "அனைவரும் சமம் என ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கவும் ஒற்றுமையை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட கொடிய சட்டங்களை இயற்றி வருகிறது.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், முறையான வேளாண் திட்டங்கள் இல்லாததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலையும் உள்ளது.
நாட்டில் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகள் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் போக்கை மக்கள் புரிந்துகொண்டு விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த விமர்சனங்களை திசைதிருப்ப இது போன்ற கொடிய சட்டங்களை விதித்து மக்களை பிளவுப்படுத்தும் வேலைகளை மத்திய பாஜக அரசு செய்ய முயற்சிக்கிறது.
இதனை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, பொதுக்கூட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. அதில் ஒரு அங்கமாக தற்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொது மக்களிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், மக்களிடையே பெற்ற கையெழுத்துகளை இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளோம். இதுவரை இரண்டு கோடி பேர் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்டுள்ளனர்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஜி. ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிதம்பரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் காயல் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை