எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான தேர்வு மையம் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் தேர்வு எழுதத் தொடங்கவில்லை. தேர்வு நேரம் முடிந்தும் சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனதால், அதனை கண்டிக்கும் வகையில் தேர்வு மையம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் பேருந்துகள் மூலமாக வந்துள்ளோம். காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடியும் இந்த தேர்வு, சோதனை என்ற பெயரில் தங்களை 10.30 மணிக்கு மேலும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, தேர்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சரிசெய்து விடுவதாகத் தெரிவித்தனர். எனினும் அந்த குறைபாடு சரி செய்யப்படவில்லை. இந்த ஒரு மையத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மையத்தில் மீண்டும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.