திருவள்ளூர்:சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
அதிமுக கிளைச் செயலாளர் வெட்டி கொலை
நேற்று (ஆக.17) நள்ளிரவு வீட்டின் அருகே கழுத்து, கை, கால் என சிலம்பரசன் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவர் காவல் நிலையத்தில் சரண்
இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிலம்பரசனை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகிய இருவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் தகராறு
கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்ததால் ஏற்பட்டத் தகராறில் சிலம்பரசனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினரின் கண்காணிப்பு அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் சிக்கிய 360 கிலோ கஞ்சா