கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சென்னையைச் சுற்றியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தளர்வுகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், இந்தப் பகுதிகளில் இருந்து மது பானங்களை வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்றுவந்தனர். இதில் சிலர் காவல்துறையினரிடம் வசமாகவும் பிடிபட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு சிலர் மது பாட்டில்களை கடத்திச்செல்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் திருமழிசை கூட்டுச் சாலையில் சோதனைச் சாவடி அமைத்து அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிக மது பாட்டில்களை எடுத்து வந்த 8 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 300 மது பாட்டில்கள், அதனை கொண்டுவந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவ்வழியாக வரும் வாகனங்களைத் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.