திருநெல்வேலி: இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோவாக எடுத்து அடுத்தவர்களை கவருவதற்காகவும், தங்களையும் திரைப்பட ஹீரோக்கள் போன்று காட்டி கொள்வதற்காகவும், லைக்குகள் பெறுவதற்காகவும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆபத்து விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என போலீசாரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆகையால் போலீசார், இரவு நேரங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண் கொத்தி பாம்பு போல் கண்காணித்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவ 12 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: நெல்லையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு கழிவுகள்.. மோசமடைந்த காற்றின் தரம்!
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் திசையன்விளையில் YAMAHA MT 15 வாகனத்தில் லைட் எரியும் பகுதியை சுற்றி பட்டாசை கட்டி வைத்து அதை பற்ற வைத்து சாலையில் வீலிங் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை ‘தீபாவளி தல தீபாவளி’ என்ற பாட்டு வைத்து எடிட் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாது. இந்த காட்சிகள் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய திசையன்விளையை சேர்ந்த சுஜின் மற்றும் மணிகண்டன் ஆகியோரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வலம் வந்த முக்கிய பிரமுகர் கைது!