தமிழ்நாடு ஈரநிலம் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈர நிலத்தின் சுற்றுச்சூழல் தேவை, பொருளாதார மதிப்பீட்டை அறிந்து கொள்வதற்காக ஏரி, குளங்களின் நிலை, சுற்றி வசிக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
அந்த வகையில், ஆய்வுப் பணிக்காக தமிழ்நாடு ஈரநிலம் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விஎம் சத்திரத்தில் உள்ள குளத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
குளத்தின் எதிர்கால நிலை குறித்தும் குளத்தைச் சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்தும் அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்திவருகின்றனர். இந்தப் பணிகள் ஓரிரு நாள்களுக்கு நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள குளங்கள் ஏரிகளின் நிலை குறித்தும் மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்து திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு இவர்கள் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.