திருநெல்வேலி: நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணிகள் இன்று (ஆக.12) தொடங்கின.
அதன்படி திருநெல்வேலி சங்கர்நகர் தேர்வுநிலை பேரூராட்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் முன்னிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இணையதளத்தில் பதிவேற்றப்படும் இயந்திரங்கள்
இதுகுறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் குத்தாலிங்கம் பேசுகையில், “திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 600 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3 ஆயிரத்து 200 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடங்கும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தொடர் எண்கள், தயாரிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்டவைகள் பதிவு செய்யப்பட்டு, மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. ஒரு வார காலத்திற்கு பதிவேற்றப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: 20 ஆண்டு அனுபவத்தில் இப்படி நான் பார்த்ததில்லை - திமுக எம்பி திருச்சி சிவா