திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த காவல்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படைகள் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநகர பகுதியில் வாகன தணிக்கை பணிகளை நேற்று (மார்ச்.3) மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தொடக்கிவைத்தார். அப்போது துணை ராணுவ படையினரும் மாநகர காவல்துறையுடன் இணைந்து வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து துணை ஆணையர் சீனிவாசன் கூறுகையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணி தொடர்பாக மாநரை சுற்றிலும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினர் 81 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பதற்றமான இடங்கள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள். இது தவிர வாகன தணிக்கையிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நேரம் மற்றும் இடங்களை அவ்வப்போது மாற்றி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் முழு அளவில் அமல்படுத்தப்படும். மாநகர காவல்துறை சார்பில் 25 இருசக்கர ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமான முறையில் நடத்த அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறோம்” என்றார்.
அப்போது, திருநெல்வேலியில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க:இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல்