தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மக்களவை தேர்தலில் எங்களது கோரிக்கையை தேர்தல் முடிந்த பிறகு நிறைவேற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார் .
தேர்தல் முடிந்தும் இன்று வரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்பது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதத்தில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்றும், பின்பு சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றோடு அந்தக் காலக்கெடு முடிவடைந்து விட்டது. எங்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு புறம் தள்ளி வருகிறது.
அதுபோல இமானுவேல் சேகரனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டி போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தமிழ்நாடு அரசு போல மத்திய அரசும் எங்களுக்கு பொய்யான வாக்குறுதி அளித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எங்களது கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிக்கப்படாவிட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களை திரட்டி நாடளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.