திருநெல்வேலி: மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அதன் மாநில பேச்சாளர் ரகமத்துல்லா ஹிஜாப் வழக்கு விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து ஆவேசமாக பேசியிருந்தார்.
குறிப்பாக, 'இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதாகவும், அதுபோன்ற நீதிபதிகளுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது சம்பவத்தில் சிக்கிக் கொண்டாலோ, நாங்கள் பொறுப்பல்ல. சக நீதிபதிகள்தான் பொறுப்பு' என்று பகிரங்கமாக மிரட்டல் விடும் தொணியில் பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரஹ்மத்துல்லாவை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் ரகமத்துல்லா பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி காவல் துறையினர் அங்கு சென்றனர். தீவர தேடுதலுக்கு பின், ரஹ்மத்துல்லாவை கைது செய்து மதுரை மாவட்ட தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மதுரை தனிப்படை காவல்துறையினர், அவரை மதுரை அழைத்து சென்று நீதிபதி விசாரணைக்கு பின்பு சிறையில் அடைக்க உள்ளனர்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு: இப்போது சாட்சிகளை விசாரிக்க இயலாது - உயர் நீதிமன்றம்