திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருந்து வரும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன் பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, திருநெல்வேலி தூத்துக்குடி நேச்சர் கிளப் அமைப்பு சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி கால் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
11ஆவது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 200 பேர் பங்கேற்று பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பறவைகளை இனம், ரகம் வாரியாக அவைகளை நேரில் கண்டு அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள வேய்ந்தன் குளத்தில் தற்போது பெய்த கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து குளம் நிறைந்துள்ளது.
இந்த குளத்திற்கு எந்த வருடமும் இல்லாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் வந்து தங்கி தற்போது இனப்பெருக்கம் செய்து வருகிறது. இங்கு பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கண்டு கணக்கீடு செய்யப்பட்டன.
தொடர்ந்து கங்கைகொண்டான் பெரியகுளம், ராஜவல்லிபுரம் குளம், நயினார்குளம் உள்ளிட்ட குளங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: நாகர்ஹோல் தேசிய பூங்காவில் பறவைகள் கணக்கெடுப்பு: புதியதாகக் காணக்கிடைத்த 6 பறவை இனங்கள்