புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.8) விறுவிறுப்பாக நடந்தது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. வாக்களிப்பதற்காக மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின.
டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தது 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்ததோடு, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் தோல்வியை சந்தித்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்
குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாக டெல்லியை ஆண்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருவருக்கும் கடுமையான போட்டி நிலவிய நிலையில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியுற்றார்.
மணீஷ் சிசோடியா
மேலும், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் தோல்வியை தழுவினார். ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக பாஜக வேட்பாளர் தார்வீந்தர் சிங் மார்வா போட்டியிட்டார். இந்நிலையில் இங்கு கடுமையான போட்டி நிலவிய நிலையில் மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்தார். மணீஷ் சிசோடியா 2013, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் இம்முறை அவர் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்தார்.
இதுகுறித்து மணீஷ் சிசோடியா ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், '' நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். கட்சி தொண்டர்கள் நன்றாக போராடினர். மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர். ஆனால், நான் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். வெற்றி பெற்ற வேட்பாளரை நான் வாழ்த்துகிறேன். அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புகிறேன்'' என கூறினார்.
அதிஷி மர்லினா
ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி மர்லினா வெற்றி பெற்றார். கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றாலும் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் முதல்வர் அதிஷி 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சத்யேந்திர ஜெயின்
இதே போல பணமோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சத்யேந்திர ஜெயின், ஷகுர் பஸ்தி தொகுதியில் தோல்வியடைந்தார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவத் ஓஜா பட்பர்கஞ்ச் தொகுதியில் தோல்வியடைந்தார். பட்பர்கஞ்ச் தொகுதியில் அவத் ஓஜாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர் நேகி வெற்றி பெற்றார்.