கரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை, மாநகராட்சி சார்பில் பொது மக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகளும் மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுத்து அறிவுரை வழங்கினர்.
முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக் கூடாது எனவும்; தலைக்கவசத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் முகக்கவசத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பேசியதாவது, 'திங்கள் முதல் திறக்கப்பட உள்ள உணவகங்களை கண்காணிக்க 10 குழுக்கள் மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் உணவகங்களில் முகக் கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்டவைகளை கண்காணிப்பார்கள். மேலும் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருவாரத்திற்கு ரோந்து வாகனங்கள் மூலம் தினமும் 100 இலவச முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். மேலும் ஒரு வாரத்திற்கு மேல் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செவிலியர்களுக்கு மருந்துகளை வழங்கிய பசுமை தாயகம் அமைப்பு!