திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.250 சிறப்புக் கட்டணம் தரிசனம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இனி, ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும் பொதுதரிசனம் ஆகிய இரு வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் தரிசனத்தில் மாற்றங்கள்
இந்த நடைமுறை இன்று(மார்ச்.9) முதல் அமலுக்கு வருவதாகக் கோயில் இணை ஆணையர் குமரதுரை (பொறுப்பு) தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ரூ.250, ரூ.100, ரூ.20 ஆகிய கட்டண தரிசனங்களும், பொதுதரிசனமும் என நான்கு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதில் ரூ.250 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பல்வேறு வகையில் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்நிலையில், கோயில் தரிசனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரப் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கோயிலில் ஆயுதப்படை காவல்துறையினரைப் பணியில் நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தார்கள். இக்கோயிலில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது.
ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு
ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று(மார்ச்.9) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோயிலில் திரிசுதந்திரர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், பல நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அடையாள அட்டை வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு உதவும் வகையில் இருக்கும். அதேபோல் கோயில் பாதுகாப்புப் பணியில் 125 ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் இன்று(மார்ச்.9) முதல் ஈடுபட உள்ளனர்.
ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாகச் சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிசுதந்திரர்களுக்கான அடையாள அட்டை
பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. விஐபி தரிசனத்திற்குத் தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோயிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களைக் கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று(மார்ச்.9) முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்