தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் தரமற்ற எண்ணெய்யை பயன்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதனை கண்டறிய அரசு சார்பில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அலுவலர்கள் உணவகங்களில் அடிக்கடி ஆய்வு செய்வதில்லை.
இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயோடீசலாக மாற்றி மீண்டும், அதனை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று (நவ.27) தொடங்கி வைத்தார்.
![தரமற்ற எண்ணெய்யை பல உணவகங்கள் பயன்படுத்தி வந்தது அம்பலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-01-repurposecookingoil-schemelaunched-vis-7205101_27112020110450_2711f_00498_120.jpg)
Repurpose Used Cooking Oil (RUCO) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தை, தனியார் ஆயில் நிறுவனமானது உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய உணவகங்கலில் இருந்து தினமும் பயன்படுத்தும் எண்ணெய் ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் அந்த எண்ணையை அலுவலர்கள் பரிசோதித்தனர்.
அப்போது பெரும்பாலான உணவகங்களில் தினமும் பயன்படுத்தும் எண்ணெய் தரமற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக எண்ணெய்யில் தீங்கு விளைவிக்கக்கூடிய மூலக்கூறுகள் 25 சதவீதத்துக்குள் இருந்தால் அது தரமான எண்ணெய். 25 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் அது தரமற்ற எண்ணெய் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
தரமற்ற எண்ணெய் பயன்படுத்தியதற்காக உணவகங்களில் நிர்வாகத்தினருக்கு அபராதமோ தண்டனையோ எதுவும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து உணவகங்கள் உரிமையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் கொடுத்து பணம் பெற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், "இத்திட்டத்தின் மூலம் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயோ டீசலாக மாற்றி விற்பனை செய்யப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சுகாதாரமான மாவட்டமாக மாற்றுவதற்கு முன்னோடி திட்டமாக இது அமையும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டத்தின் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: 8 மாதங்களுக்குப் பிறகு திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு!