சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கு மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நமக்களித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.
பொதுவாக மாணவச் செல்வங்களைப் பொருத்தவரை, மதிப்பெண் அவசியம் தான்; ஆனால் மதிப்பெண் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யாது. இந்த வயதில் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், நம் செய்தியாளருடன் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை கீழ்வருமாறு காணலாம்.
மனப்பாடம் செய்து படித்தால் பெரிய பயன் இருக்காது. பாடம் புரிந்துவிட்டால், உங்களுக்கான மதிப்பெண்கள் எளிதாகக் கிடைக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பது தான் தேர்வில் கேள்வியாகக் கேட்கப்படும். எந்த இடத்தில் கல்வி கற்றீர்களோ, அதே இருக்கையில் இருந்து தான் பெரும்பாலானோர் தேர்வை எழுதப் போகிறீர்கள். சில மாணாக்கர்களுக்கு மட்டும் தேர்வு மையம் மாறலாம்.
பாடத்தில் கவனம் தேவை:
எனவே, உங்கள் நண்பர்களுடன், உங்கள் பள்ளியில் தேர்வு எழுதும் சூழல் இருப்பதால், நன்றாக படித்துவிட்டு தைரியமாகத் தேர்வெழுதுங்கள். தேர்வுக்கு முதல்நாள் கண்விழித்து, சரியாக உண்ணாமல், உறங்காமல் விடிய விடிய படித்துவிட்டு உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். பின்னர், தேர்வறையில் வந்து தூங்குவதும் வேண்டாம்.
பாடத்தில் கவனம் செலுத்தி படியுங்கள். அப்படி நீங்கள் கவனம் செலுத்தி படிக்கும்போது தான் பாடத்தைக் குறித்த நல்ல புரிதல் ஏற்படும். புரிதலுடன் எழுதினால், அதற்கான மதிப்பெண்கள் அவசியம் வழங்கப்படும். நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். ஒரு இலக்கை வைத்துக்கொண்டு எல்லோரும் படிக்க வேண்டும். மாணாக்கர்களுக்கு நேர மேலாண்மை மிகவும் அவசியமானதாகும்.
பெற்றோர்களுக்கு கோரிக்கை:
பெற்றோர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். எப்போதும், பிள்ளைகளுக்கு தேர்வுக்கான அழுத்தத்தை தராதீர்கள். அவர்கள் பதற்றமில்லாமல் தேர்வை அணுக நீங்கள் உதவ வேண்டும்.
இதையும் படிங்க: Exclusive: "தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மத்திய அரசு".. அமைச்சர் அன்பில் மகேஸ் ஆதங்கம்! |
பொதுத் தேர்வு என்பது பிற தேர்வுகளைப் போன்ற சாதாரணமானது தான் என்ற மனநிலையை உருவாக்குங்கள். காரணம், இந்த தேர்வுக்கு முன்னதாக மூன்று திருத்தத் தேர்வு வைக்கப்படுகிறது. அதிலேயே மாணாக்கர்களின் பயம் களையப்படுகிறது.
எனவே, வகுப்பறை தேர்வு எழுதும் மனப்பாண்மையுடன் வந்து பொதுத் தேர்வு எழுதி மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றால் போதும்.
பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள்:
முதலில், தேர்வு நடக்கும் பள்ளிகளில் கழிவறைகள், தேர்வறைக்கு வெளியே குடிநீர் போன்ற வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும். வினா, விடை தாள்களை சரியாக பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவை ஒவ்வொரு மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு சென்றுசேரும் வரை, அனைத்து ஏற்பாடுகளும் முன்னே திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கும். கடந்த ஆண்டைப் போலவே, இம்முறையும் சீராக சரியாக பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
இதையும் படிங்க: Exclusive: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள்...தைரியமாக புகாரளிக்க விழிப்புணர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி! |
மேற்கூறிய தகவல்களை நம்முடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துகொண்டார். அந்த வகையில், மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்க வேண்டும், சாதாரண தேர்வுகளை போல பொதுத் தேர்வுகளை பதற்றமில்லாமல் கையாள வேண்டும், இலக்குடன் படிக்க வேண்டும் போன்றவற்றை அவர் அளித்த பேட்டியின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.